Thursday 22 May 2014


என்றாள்;என்றேன்…!!

நான் என்பது பொதுப்பெயர் என்றாள்,
பிரபஞ்சத்தின் துணுக்குகள் தன்னை பிரபஞ்சமாக நினைத்துக் கொள்ளும் மயக்கம் என்றேன்

ஓவியம் என்பது வண்ணங்களின் கலவை என்றால்
இசை என்பது ஒலிகளின் முயக்கம் என்றாள்,
இவையிரண்டுமே புலன்களின் மயக்கம் என்றேன்

கலை என்பது இச்சைகளின் புனிதப்போர்வை என்றாள்,
புனிதம் என்பது கற்பிதங்களின் உருவெளித்தோற்றம் என்றேன்!

ஓவியம் என்பது உணர்வுகளின் வர்ணம் என்றாள்,
வர்ணம் என்பது இசையதிர்வுகளின் கண்காட்சி என்றேன்

மரணம் என்பது உயிரின் பிரிவு என்றாள்,
மரணம் என்பது ஆன்மாவின் விடுதலை என்றேன்

முதுமை என்பது மரணத்தின் முற்றம் என்றாள்,
முதுமை என்பது வாழ்வின் பூரணம் என்றேன்

நான் என்பது பெயர்ச்சொல் என்றாள்,
நாம் என்பது வினைச்சொல் என்றேன்

பெயர்களுக்கு ஏதும் அர்த்தம் உள்ளதா என்றாள்,
அந்த அர்த்தம் அர்த்தப்பட செயல்பட வேண்டும் என்றேன்

பெயர்களுக்குள் என்னை அடைக்க முடியாது, வெறும் பெயரல்ல நான் என்றாள்..
முகங்களுக்குள்ளும் உன்னை முடக்க முடியாது, வெறும் முகமல்ல நீ என்றேன்!

பெயரற்றவளை என்ன பெயர்சொல்லி
அழைப்பது என்றாள்,
முகமற்றவளுக்குப் பெயரெதற்கு என்றேன்.   

கனவு என்பது ஏக்கங்களின் கானல்நீர் என்றாள்,
கனவு என்பது சாத்தியங்களின் முன்னோட்டம் என்றேன்.

கடந்த காலம் என்பது நிகழ்காலத்தின் எச்சம் என்றாள்,
அவை வருங்காலத்தின் அடியுரம் என்றேன்

செல்வம் பெருக்குதல்தான் வாழ்க்கையில் வெற்றியா என்றாள்,
வறுமையை வெல்வது மட்டுமே வாழ்க்கையாகாது என்றேன்.

கலாச்சாரம் என்பது மூடிய இதயங்களின் பிடிவாதம் என்றாள்,
பிடிவாதம் என்பது தோல்வியுற்ற சித்தாந்தங்களின் முட்டுக்கொடுப்பு என்றேன்...!!