Saturday 2 March 2013


பள்ளி ஆண்டுவிழா -நிஷா

பரிசைத் தவறவிட்ட குழந்தை
தன் தோழி பரிசுபெறும் நிகழ்வை
உற்சாகத்துடன் கொண்டாட.....

தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தது,
இரவு பகலாய் பயிற்சி கொடுத்திருந்த
அம்மாக் குழந்தை..!! 

நீ இரைத்துவிட்ட 
எனக்கான உணவை பொறுக்க, 
நாடெங்கிலும் பறந்துகொண்டிருக்கும்
எளிய பறவை நான்

என் கால்களுக்கடியில் 
பறக்கிறது காலம்,
சக்கரம் கட்டிக்கொண்டு

-
நிஷா மன்சூர்

நெருக்கடிகளின் காலம்  - நிஷா

இந்நிகழ்வுகள் என்னை குழப்பக்கயிற்றிலிருக்கி
கேள்விகளின் திரியைத் தூண்டி
ஸ்திரமின்மையின் கூரிய அலகுகளால்
கொத்திக்கொத்தி சலனப்படுத்தி அலைக்கழிக்கின்றன

கருத்துக்களேதுமற்ற வறண்ட புன்னகைகளை
ஒரு தோளிலும்
கடிவாளக் குதிரையின் முரட்டு மனப்புணர்ச்சியின் வெறியை
மற்றொரு தோளிலும்
சுமந்துகொண்டு திரிகிறேன்

திரையரங்குகளிலிருந்து வெளிவரும் சவங்களின் கண்களில்
குழந்தைகள் கர்ப்பமுறும் காட்சிகளின் கோரபிம்பம்
பலவர்ணப் கலவைகளால் சூழப்பட்ட முகங்கள்
தலைவர்களின் புன்னகையில் கொக்கரிக்கின்றன

கனவுகளில் வந்து ஆர்ப்பரிக்கின்ற
தலையில் காளான்முளைத்த ஜந்துக்கள்
நம் வாயிற்கதவைத் தட்டும்நாள்
வெகுதூரத்திலில்லை

எலிப்புழுக்கைகள் செவ்வெரும்புக்கூட்டங்கள் மற்றும்
பருத்த கொசுக்களென
ஒரு மாபெரும் ஆஷ்ட்ரேவாகிவிட்ட
என் சிற்றறை
நாளாக நாளாக குறுகிக்கொண்டே வருகிறது,
ஒரு சவப்பெட்டியின் வடிவில்..!!

சுவடு-1997

Saturday 23 February 2013

பரிவர்த்தனை -நிஷா

நீ தந்த துரோகத்தின் வலிகளை 
உனக்கே திருப்பி அனுப்பி வைக்கிறேன்,
என்னால் சுமக்க இயலாதென

தயைகூர்ந்து
என் நம்பிக்கையின் விதைகளை
எனக்கே திருப்பித் தந்துவிடு,
நான் என் கண்ணீர் ஊற்றியாவது
தழைக்கச் செய்து விடுகிறேன்..!!
பிடித்த உணவைச் சொல்லுங்க 
சமைத்துத் தருகிறேன்
எனக்கேட்கும்
மனைவியின் கேள்விக்கு
பதில்கூற முடியாமல் 
திகைக்கிறான்,
கிடைத்ததைத் தின்று
வாழப் பழகியவன்...!!

-நிஷா

நாளை -நிஷா

நேற்றைய ஆறு அல்ல
இன்று ஓடும் ஆறு

இந்த வானமும்
நேற்றிருந்த வானம் அல்ல

நேற்றைய கவலைகளை
விரட்டி விடிகிறது இன்றைய
புத்தம்புது விடியல்

இன்றைய தோல்விகள்
ஈடு செய்யப்படும்,
நாளைய வெற்றிகளால்

நேற்றைய இரவும்
இன்றைய இரவும் ஒன்றல்ல

கரைந்த நிமிடம் அல்ல
பிறந்த இந்த நிமிடம்

வினாடிகளில் மாற்றம் கொள்கிறது
பிரபஞ்சம்

முந்தைய மூச்சை பழையதாக்கி
ஆழ இழுக்கிறோம்,
புதிய மூச்சை

ஒவ்வொரு நொடியிலும்
பல்லாயிரக் கணக்கான
செல்கள் இறந்து
பல்லாயிரக் கணக்கான
புத்தம்புது செல்கள் பிறப்பெடுக்கின்றன

நேற்றல்ல இன்று
இன்றல்ல நாளை

எனினும்
நாளை மற்றுமொரு நாளே....!!

#நாளை மற்றுமொரு நாளே -ஜி.நாகராஜன் நாவல் தலைப்பு
விடைபெறுதல் -நிஷா

என் வலிகள் வீர்யமிக்கவை;
எனினும் இந்த வாழ்க்கை இனிமையானது.

என் காயங்களின் தழும்புகள் மறைக்கமுடியாதவை;
எனினும் இந்த வாழ்க்கை இனிமையானது.

என் வழித்தடம் கரடுமுரடானது;
எனினும் இந்த வாழ்க்கை இனிமையானது.

உங்கள் இரக்கப்பார்வை பொறாமைப்பார்வையாக
மாற்றம்கொள்ளும் தருணம் கொடுமையானது;
எனினும் இந்த வாழ்க்கை இனிமையானது.

அகற்றவே இயலாதது என் சுய இரக்கத்தின் முட்போர்வை.
சுருக்கவே முடியாதது என் தனிமை இரவுகளின் நீளம்.
தவிர்க்கவே இயலாதது என் இருப்பின் உறுத்தல்.
எனினும் அடைக்கலமாகிறேன்,
என் நேசமிக்க உறவுகளின் அண்மையின் பாசக்கரங்களுக்குள்.

வறுமை நெரித்ததென் பால்யத்தின் குரல்வளையை.
செழிப்பும் நேசமும் அங்கீகாரமும் மலர்ந்ததென்
இளமையின் வசந்தகாலத்தில்.
பிணியின் நெருக்கடிகள் இறுக்கியதென்
இளமையின் உச்சத்தை.

உங்கள் பொறாமைப்பார்வை இரக்கப்பார்வையாக
மாற்றம் கொள்ளும் தருணத்தை
என்னால் எதிர்கொள்ளவே இயலாதென்பதால்
விடைபெறுகிறேன்,
யாரைக்குறித்தும் எந்த பழிவாங்குதல்களுமில்லை
யாரைக்குறித்தும் எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை.
யாரைக்குறித்தும் எந்த மனஸ்தாபங்களுமில்லை.......!!