Saturday 15 December 2012


கீற்று -நிஷா

மருத்துவமனை வளாகமெங்கும்
இரைந்து கிடக்கும் 
வலிகளின் வேதனைகளை
மிதிக்காமல் கடக்க 
முடியவில்லை

பிரிதலின் துயரத்துடனும்
நிராதரவின் மிரட்சியுடனும்
மிதக்கின்றன
சோகத்தில் உறைந்த குரல்கள்

இயலாமையும் ஆற்றாமையும்
நம்பிக்கையும் அவநம்பிக்கையும்
பெருக்கெடுத்து ஓடுகின்றன
ரத்த உறவுகளின் புலம்பல்களில்

கடந்தகால உதாரணங்களும்
நிகழ்கால புன்னகைகளும்
மிகுந்த ஆசுவாசத்தைத் தருகிறது
ஆறுதல் தேடும் மனதுக்கு

மலைபோல நம்பியிருப்பது
மருத்துவரையும்
மடிப்பணத்தையும் மட்டுமின்றி
நெக்குருகும் பிரார்த்தனைகளையும்தான்

இழப்பின் துயரம் கொப்புளிக்கும்
முகங்களை எதிர்கொள்ளும் பக்குவம்
இனிமேலும் வாய்க்குமா தெரியவில்லை

மருத்துவர் சொற்களில் மிதக்கும் பூடகம் 
எளிய கேள்விகளால் உலுக்கப் படுகிறது
நூற்றுக்கணக்கான சாவுகள் கண்டு
சுவர்போல் நகர்கிறாள் தலைமை தாதி

எனினும் இச்சூழலை அழகாக்கி
மெளனங்களையும் அவநம்பிக்கைகளையும் தகர்த்து
ஒரு இதமான பரவசத்தை அலைபோல் பரப்புகிறது,
ஒரு பச்சை சிசுவின் முதல் அழுகை…!!

No comments:

Post a Comment